Wednesday, May 14, 2008

கிழித்து குப்பையில் எறியப்பட்ட ஜாதகங்கள்!

கிழித்து குப்பையில் எறியப்பட்ட ஜாதகங்கள்!



இளைஞர் இயக்கம் என்ற அமைப்பு 2007இல் உருவாக்கப்பட்டது। இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 51 ஏ(எச்)இல் அறிவிக்கப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளான அறிவியல் உணர்வு, மனித நேயம், ஆய்வு மனப்பான்மை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தெடுப்பதுதான் இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாகும்। அறிவியல் உணர்வை இளைஞர்களிடம் பரப்பும் நோக்கோடு, 2008ஆம் ஆண்டு பொங்கல் நாளை ஒட்டி, ‘ஜாதகம் விளைவிக்கும் சமுதாயத் தீமைகள்’ என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலுமுள்ள கல்லூரி மாணவர்களைத் தொடர்பு கொண்டு இளைஞர் இயக்கம் கட்டுரைப் போட்டியை நடத்தியது।

22 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 939 மாணவ, மாணவியர் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றனர்। இவர்களில் ஆண்கள் 177 பேர், பெண்கள் 762 பேர்। இம்மாணவர்கள் 23।02।2008 சனிக்கிழமை அன்று சென்னை தியாகராயர் அரங்கில் நடந்த ‘ஜாதக ஒழிப்புநாள்’ நிகழ்விற்கும் அழைக்கப்பட்டார்கள்। காலை 10 மணிக்குத் தொடங்கிய இக்கருத்தரங்க நிகழ்வில் இளைஞர் இயக்கத்தின் அமைப்பாளர் மருத்துவர்।நா।எழிலன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்। வரவேற்புரையில், குழந்தை பிறக்கும் நேரத்தைக்கூட சரியான முறையில் கணக்கிடுவதில் உள்ள மருத்துவம் சார்ந்த சிக்கல்களை விளக்கினார்। காலம், நேரம் பார்த்து இயற்கையாக குழந்தை பிறப்பதற்கு முன்பே அறுவை சிகிச்சையின் வழியாக குழந்தையை வெளிக்கொண்டுவரும் கொடூர செயல் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டி, இது மனித உரிமை மீறல் என்றும் குறிப்பிட்டார். இரைப்பைக்கல் அறுவை சிகிச்சையைக் கால, நேரம் பார்த்து தள்ளிப்போட்டதால் அண்மையில் ஒருவர் குடற்பை வெடித்து இறந்ததையும் சுட்டிக்காட்டி காலம், நேரம், ஜாதகக்கணிப்பு ஆகியவை மனித சமூகத்திற்கு ஏற்படுத்தும் கொடுமைகளை விவரித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திரு।வீரபாண்டியன் அவர்கள், அறிவியல் அணுகுமுறையைக் கடைப்பிடிக்காததன் விளைவுகளைச் சுட்டிக்காட்டி சேது சமுத்திரத் திட்டம் போன்ற மக்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கக் கூடிய திட்டடங்களை மதத்தின் பெயரால் தடுக்கும் போக்கினை எடுத்துக்காட்டினார்।।மாநிலத் திட்டக்குழுவின் துணைத்தலைவர் பேராசிரியர் மு।நாகநாதன் அவர்கள் உரையாற்றும் போது, ஜாதகத்தை நம்பும் இந்திய மக்கள் பற்றி வானவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாகிங் அவர்கள் குறிப்பிட்டக் கருத்தைச் சுட்டிக்காட்டினார்। குறிப்பாக, கண்ணுக்குப் புலப்படாத அறிவியல் கருத்துகளுக்கு உட்படாத, ஜாதகத்தை நம்பி வாழும் மக்கள் இன்றும் இந்தியாவில் இருக்கின்றார்களே என்று ஸ்டீபன் ஹாகிங் கூறிய கருத்தைக் குறிப்பிட்டு, ஜாதகம் எவ்வாறு மக்களை மூடநம்பிக்கையில் ஆழ்த்துகிறது என்பதை விளக்கினார்। பெங்களூரில் இருந்து பல ஆண்டுகளாக வெளிவந்த ஒரு சோதிட பத்திரிக்கை சென்ற நவம்பர் இதழில், பெனாசிர் புட்டோ தான் பாகிஸ்தானின் பிரதமராக வருவார் என்று கணித்தது। ஆனால் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டார். எல்லாரைப் பற்றியும் கணித்த இந்த சோதிட இதழ், 2007 நவம்பர் திங்களோடு தனது பயணத்தை முடித்துக்கொண்டது. தங்களுடைய சோதிட இதழ் நின்று போகப் போவதையே கணிக்க முடியாதவர்கள் எவ்வாறு மற்றவர்களின் வாழ்க்கை பற்றிய கணிப்பை, ஆயுட்காலத்தைக் கணக்கிட்டார்கள் என்பது வேடிக்கையாக உள்ளது. 1950-51இல் 38 வயதாக இருந்த சராசரி ஆயுட்காலம் 2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் 65 ஆண்டுகளாக நீடித்ததற்கு, மருத்துவச் சேவையை அரசு வழங்கியதுதான் காரணம் என்பது நம் கண்களுக்குப் புலப்படுகின்ற உண்மையாகும். இந்த சராசரி ஆயுட்காலம் நீடித்தது ஜாதகத்தால் அல்ல, மருத்துவத்தால்தான் என்று அவர் குறிப்பிட்டார். சென்னையைச் சேர்ந்த பிரபல சோதிடர் ஒருவர் பலருக்கு தவறான கணிப்புகளை வழங்கி, பலரை அச்சுறுத்தி இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டதையும் குறிப்பிட்டு, சோதிடம் வழியாக மக்களை ஏமாற்றுவதை இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் ஒரு குற்ற நடவடிக்கையாக அரசு கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டார். திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள், ஜாதகம் எவ்வாறு அறிவியலுக்கும், பகுத்தறிவிற்கும் பொருந்தாத வகையில் உள்ளது என்பதை பல சான்றுகளுடன் விளக்கினார். குறிப்பாக, ஒரு தனியார் தொலைக்காட்சி தமிழ்நாட்டின் பிரபல சோதிடர்கள் கலந்து கொண்டு நடத்திய உரையாடலை முழுமையாக வெளியிடவில்லை என்று கூறினார். காரணம், அப்படி வெளியிட்டிருந்தால், அந்த நிகழ்வைக் கண்டு மக்கள் சோதிட நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்ற அச்சம்தான் அதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டார். திரு.சுப.வீரபாண்டியன் அவர்கள் விமான, இரயில் விபத்துகளில் பல நூற்றுக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் இறந்து விடுகிறார்களே, அப்படி என்றால் அந்த விபத்தில் இறந்தவர்களின் ஜாதகங்கள் எல்லாம் ஒன்றா? என்ற கேள்வியை எழுப்பியபோது இந்த சோதிடர்கள், இது ‘அகஸ்மாத் மரணம்’ என்று குறிப்பிட்டனர். இது போன்று முன்னுக்குப்பின் முரணாக, அறிவியலுக்குப் புறம்பாக பேசுவதே சோதிடர்களின் வாடிக்கையாக அமைந்துவிடுகிறது. கடந்த ஒரு வாரத்தில் நாளேடுகளில் வெளிவந்த ராசி பலன்களைக் குறிப்பிட்டு, எவ்வாறு எல்லாரையும் மன நிறைவு கொள்ளச் செய்வதற்காக, எவ்வித அறிவியல் உணர்வும் இன்றி இக்கணிப்புகள் வெளியிடப்படுகின்றன என்று நகைச்சுவையோடு குறிப்பிட்டுப் பேசினார். நிறைவாக, தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை செயலர், திரு.அசோக் வர்தன் (ஷெட்டி), இ.ஆ.ப., அவர்கள் ஒரு காட்சியுரையை வழங்கினார். புத்தர் குறிப்பிட்ட கருத்தில் தொடங்கி உலகின் புகழ்பெற்ற சிந்தனையாளர்கள், அறிவியல் அறிஞர்களின் கருத்துகளை எல்லாம் குறிப்பிட்டு, ஜாதகப் பொய்யை விளக்கினார். கோள்களின் எண்ணிக்கை மாறி வருவதும், அதனை இந்தச் சோதிடர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், பூமியை மையமாக வைத்துக் கொண்டு மற்ற கோள்கள்தான் பூமியைச் சுற்றிவருவதாகவும் ஒரு கருத்தை தெரிவித்து, பூமியின் சுற்றியக்கத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் கணிப்பதே ஜாதகம் என்று விளக்கினார். அண்மைக்கால அறிவியல், வானியல் கண்டுபிடிப்புகளின்படி சூரியக் குடும்பத்திற்கு அப்பாலும், பல கோள்களும், பல எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் உள்ளன, இந்த அறிவியல் உண்மைகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாததுதான் ஜாதகம் என்றும் குறிப்பிட்டார். கடந்த பல நூற்றாண்டுகளில் கோள்களின் சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு, கோள்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து 30 டிகிரி மாறி இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். இப்படி மாறிவிட்ட கோள்கள் பூமியின் உயிர்களின் மீது எவ்வகை சாதக பாதகங்களை ஏற்படுத்த முடியும்? அதை எவ்வாறு துல்லியமாகக் கணக்கிட முடியும்? என்ற வினாக்களை எழுப்பினார். சூரியனில் இருந்து பூமிக்கு ஒளிவந்து பாய்வதற்கு ஏறக்குறைய 10 நிமிடங்கள் ஆகின்றன. பல கோள்களினுடைய பாதிப்பு வருவதற்கு பல ஆண்டுகளாகின்றன. சாதாரணக் கண்களால் நாம் சூரியனைப் பார்க்கும்போது, 10 நிமிடத்திற்கு முன்பிருந்த நிலையிலிருந்த சூரியனைத்தான் நாம் பார்க்கின்றோம். ஆகவே, நிமிடத்திற்கு நிமிடம் சூரியன் இடம் பெயர்கிறது. இச்சூழலில் சோதிடத்தைக் கணக்கிடுகிறோம். அதன் பாதிப்பு உயிர்களின் மீது உள்ளது என்பதெல்லாம் பொய், மோசடி என்றும் குறிப்பிட்டார். மக்கள் அறிவியல் உணர்வை பெற்று, பகுத்தறிவாளர்களாக, சமுதாய வளர்ச்சியில் எல்லோரும் பங்கு கொள்ள வேண்டியது இன்றைய காலக்கட்டத்தின் தேவை என்றும் குறிப்பிட்டார். பொங்கல் விழா 2008 கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்பின்னர், முதல் நிகழ்விற்கான நன்றியுரையை திரு.க.செந்தில்ராஜா வழங்கினார். ஜாதக எதிர்ப்பு இயக்கத்தை மாவட்டந்தோறும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சூளுரையை அனைவரும் மேற்கொண்டனர். பகல் ஒரு மணிக்கு 750க்கும் மேற்பட்ட மாணவர்களும், இளைஞர்களும் கருத்தரங்கிற்கு வந்திருந்த பிரமுகர்களும், ஜாதகங்களைக் கிழித்து குப்பைத் தொட்டியில் எறிந்தனர்.



Posted by அதி அசுரன்
www.thozharperiyar.blogspot.co

No comments: